Monday, October 25, 2010

தங்கமீன் முதல் இதழ்- ஒரு பார்வை.

சிங்கப்பூரிலிருந்து வரும் ஒரு இதழில் சிங்கப்பூரைப் பற்றிய செய்திகளும் சிங்கப்பூர் படைப்பாளிகளின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என நான் ஆசைப்பட்டவாறே வந்திருக்கிறது தங்கமீன் முதல் இதழ்.

கவிதை முதல் கட்டுரை, கதை, சமூகம், பொது, இளைஞர் பக்கம் என அனைத்திலும் சிங்கப்பூர் செய்திகளும் தளமுமாய் இருப்பது நிறைவு. சிங்கப்பூரில் இத்தனை படைப்பாளிகளா என ஆச்சரியமும் வந்தது. இந்த ஆச்சரியத்தை பாலுமணிமாறன் இன்னும் தொடர்வார் என நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்.

சில கட்டுரைகள் ரொம்பவும் நிறைவு.

வள்ளல் கோவிந்தசாமி பற்றிய செய்திகள் எனக்குப்புதிது.

மரத்தைப் பற்றி எழுதியவர் முதலில் புளிய மரத்தை எடுத்தது எனக்கு ஆச்சரியம். ஏனெனில் சிங்கப்பூரில் புளியமரம் காணக்கிடைப்பது மிகவும் அரிது என நினைத்திருந்தேன். ஆனால் அதில் சொல்லியிருக்கின்றபடி இப்போது கூர்ந்து கவனித்தால் நிறைய புளிமரங்கள் காணக்கிடைக்கின்றன. நேற்று மாலை நடந்துவரும்போது கவனித்த விஷயம், முஸ்தபாவிற்கு எதிரில் இருக்கும் மசூதி அருகே ஒரு 'வெடல' புளியமரம் இருக்கிறது.

"மினி என்விரான்மெண்ட் செர்வீஸஸ்" உரிமையாளர் திரு அப்துல் ஜலீல் அவர்களின் பேட்டி சிறப்பாயிருந்தது. நோன்பு விருந்துக்கென ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் வரும் ஆடுகளை கொட்டும் மழையில், கப்பலின் மேல் நின்றுகொண்டு இறக்கிக்கொண்டிருந்தவாறு, ஒரு புகைப்படம் கடந்த வருடம் ஒன்றில், ஆங்கிலநாளிதழில் பார்த்தேன். கோடீஸ்வரரான பிறகும் இப்படி "தரையில் இறங்கி" வேலை பார்ப்பவர்கள் அடிமட்டத்திலிருந்து முன்னுக்கு வந்தவர்களாக இருக்கக்கூடும். கோடீஸ்வரராயிருந்தாலும் இன்னும் 10 வெள்ளியே செலவு செய்யும் அசாத்தியம் அறிந்துகொள்ளவேண்டியதே.

தமிழகத்திலுருந்து தேர்தல் வருகிறது மாலனின் கட்டுரையும் சாருவின் சமகாலத்து இலக்கியவாதிகளின் தொடர்பு குறித்தான பங்களிப்பும் சிறப்பு.

இந்திரஜித்தின் கட்டுரை எனக்குப்பிடித்திருந்தது. 'அறச்சீற்றமாக' இருந்தபோது எழுதியது என நினைக்கிறேன்.

இளவழகன் முருகன் எழுதிய எந்திரன் விமர்சனம் நிறைய கவனிப்புகளுடன் நிறைவாக இருந்தது.

சுப்ரமணியன் ரமேஷின் குட்டி தேவதை திரும்பவும் தீண்டிய தென்றல்.

டாக்டர் சபா நடராஜன், ஷானவாஸ் கட்டுரைகளும் யதார்த்தம் கலந்த இனிமை.

புதுமைத்தேனியாரின் சினிமா அனுபவங்கள் படிப்போரை மகிழ்விக்கும் என நம்பலாம். கிசுகிசு அல்லது சொல்லாத சேதிகள் இருந்தால் அள்ளிவிடுங்கள் என 'தெரிந்த நண்பர் ஒருவர்' சொல்லச்சொன்னதை அவரிடம் சொல்லலாமா எனத்தெரியவில்லை.

கேள்வி பதில், சினிமா செய்திகள், நிகழ்வுகள், இளைஞர் பக்கம், வசந்தம், ஒலி & ஓளி என அனைத்தையும் இணைத்திருக்கும் போக்கு பாராட்டக்கூடியது.

சிறுகதைகளை இனிமேல் தான் படிக்கவேண்டும்.

தங்கமீன் இணைய இதழ் வெளியீட்டில் தமது பத்தாண்டு கனவு என்று திரு ஆண்டியப்பன் அவர்களும், சிங்கப்பூர் மார்க்கண்டேயர் (எப்படி சார் எப்பவும் இளமையோட இருக்கீங்க என நான் பார்க்கும்போதெல்லாம் கேட்கும்) திரு. அருண்மகிழ்நன் அவர்களும் சொன்னதாகப் படித்தேன். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். அக்கனவு இன்று நிஜமாயிருப்பதில் மகிழ்வு.

முதல் பக்கம் பளிச்சென்று இருந்தால் நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்.

தங்கமீன் மென்மேலும் பலவெற்றிகளைப்பெற வாழ்த்துகள்.

அன்பன்
எம்.கே.குமார்.

1 comment:

ரோஸ்விக் said...

தங்கமீன் இதழ் அருமையான செய்திகளுடன் சிங்கை முழுவதும் நீந்தி வர வாழ்த்துகள்.

Search This Blog