Friday, May 27, 2011

பயணம் - பறக்க மறந்த உச்சம்

ஒரு விஷயத்தை முதலில் சொல்லவேண்டும். அது, ’மொழி’ படம் ஏன் மகத்தான வெற்றிபெற்றது என்பது, அதை தயாரித்த பிரகாஷ்ராஜுக்கும் இயக்கிய ராதாமோகனுக்கும் தெரியவில்லை. ஆனால், அவர்கள் அதை அறிந்துகொண்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும்.

அதை அறிந்துகொண்டதாக இருவரும் நினைத்துக்கொண்டிருப்பதாலோ என்னவோ ’அபியும் நானும்’ ’பயணம்’ போன்ற அரைகுறைகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அரைகுறை ஆனாலும், தற்போதைய சமூக, சினிமா சார்ந்த அபத்தங்களுக்கும் ஆபாசங்களுக்குமிடையில் இவை, புறங்கையால் அப்புறப்படுத்தவேண்டியவை அல்ல என்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும். காரணம், ஒரு கல்யாணமண்டபம் கட்டலாம், அல்லது கட்சி ஆரம்பிக்கலாம் என்பதையெல்லாம் விடுத்து, சொந்த பணத்தில் ’நல்ல படம்’ எடுக்கவேண்டும் என்று நினைக்கும் ’பாவம்’ பிரகாஷ்ராஜுக்காக.

சென்னையிலிருந்து டெல்லி கிளம்பும் ஒரு விமானம் கடத்தப்படுவதும் அதை மீட்க, அதிரடிப்படை அதிகாரியும் தலைமைச் செயலாளரும் போராடுவதும் தான் கதை.

ராதாமோகனும் பிரகாஷ்ராஜும் தமிழ்ப்பட உலகில் நகைச்சுவை நுண்ணுணர்வு கொண்டவர்களில் சிலர் என்பது தொடர்ந்து வரும் அவர்களது எல்லாப்படங்களிலும் சில காட்சிகளை உருவாக்குவதையும் அதை ஆதரிப்பதையும் அறிந்திருந்தால் நாம் உணரமுடியும். கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துத் தருவதாலேயேஒரு பெண்ணுக்கு காதல் வந்துவிடும் அளவுக்கு நாமும் இந்த சமுதாயமும் உருவாகியிருப்பதை அவர்கள் கையாண்டதும் இந்த நுண்ணுணர்வின் அடிப்படையில் தான்.

பத்திரிக்கை தர்மத்தை உயிரோடு கொளுத்தி ’கருமாதி’ பண்ணி பலவருடங்கள் ஆகிவிட்ட வேளையில், பத்திரிக்கைகள் படுத்தும் பாட்டை இப்படத்தில் காட்ட முனைந்ததில் உச்சம் இல்லை. மேலோட்டமே முன்னிற்கிறது. நான் பார்க்கவில்லை, இருந்தாலும் படித்த விமர்சனங்களிலிருந்து, ”பீப்ளி லைவ்” திரைப்படம் அதை மிகச்சிறப்பாக தோலுரித்துக்காட்டியிருக்கிறது என்றறிகிறேன். வசனங்களாலும் நேர்த்தியான காட்சிகளாலும் ”உன்னைப்போல் ஒருவன்” இதை சிறப்பாகக் கையாண்டதாக நினைக்கிறேன்.

சினிமாவில் இருந்துகொண்டே சினிமாவைக் கிண்டலடிப்பது, கலைஞரைத் திட்டிக்கொண்டே ’இலவச டிவி’க்கு நாம் வரிசையில் நிற்பதைப்போன்றது மட்டுமல்லாமல், கிண்டலடிக்கும் சினிமாவை ரசித்துவிட்டு வெளியில் வந்து “தலைவனுக்கு” பாலாபிஷேகம், பீராபிஷேகம் அல்லது கொடியாபிஷேகம் பண்ணுவதும் போலத்தான். தியேட்டரில் இது சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு. தமிழர்களுக்கு தமிழில் ’பிடிக்காத’ வார்த்தை ’திருந்துவது’. நாமும் திருந்தமாட்டோம், நம்மைத் திருத்த வருவதாக நினைத்துக்கொண்டு வருபவர்களையும் திருத்த மாட்டோம்.

இப்படத்தில் வரும் ’ஷைன்ஸ்டார்’ ’காந்த்’ நடிகரும் அவரது பக்கத்து இருக்கைக்காரர் செய்யும் அபிநயங்களும் ரசிக்கத்தான் வைக்கின்றன.
போட் கவிழ்கிறது, கேப்டன் கடலில் குதிக்கச்சொல்கிறார் எனச்சொல்லவும், உடனே ஒருவன், கேப்டன்னா விஜயகாந்தா என்று சீரியசாய் கேட்பதும் நம் நினைவில் வரும் பிரகாஷ்ராஜ்ஜின் இன்னொரு படம். (இனிமேல் அப்படிக் கேட்கமுடியாது நண்பரே, 42 சீட்டாம்; டவுன் ஏரியாவில் தோற்றதெல்லாம் போக, பாதியாவது தேறும் போல இருக்கிறது.) ஆக, பிரகாஷ்ராஜ் ராதாமோகன் கூட்டணி இதைத் தொடர்ந்து செய்து வருகிறது என்பதே ஒரு கவன ஈர்ப்புதான்.

படைப்பாளர்களைக் குழுவாக்குவதில் பல உத்திகள் காலம்காலமாய்க் கையாளப்படுகின்றன. சில ’சுய’ உதவிக்குழுக்களை அவர்களே தமக்குள் உருவாக்கிக்கொள்கிறார்கள். கழிப்பறை, நவீனகழிப்பறை, அதிநவீன கழிப்பறை போல இலக்கியவாதி, நவீன இலக்கியவாதி, பின் நவீனத்துவ இலக்கியவாதி என, நண்பர் ”மானஸாசென்”னின் ஒரு கவிதையைப்போல குழு உருவாக்கம் படைப்பாளர்களிடையே விரிகிறது.

இது தவிர தற்போதைய படைப்பாளிகளில் படைப்பாளி, சுயசாதி மறுப்பாளரோ அல்லது சுயசாதி சார்புடையவரா என்பதும் அண்மையில் நடக்கும் ஒரு நவீனத்துவம். காண்க (http://www.kalachuvadu.com/issue-134/page22.asp)

இந்நிலையில் ராதாமோகன் போன்ற படைப்பாளிகளை எந்தக்கட்டுக்குள் கொண்டுவருவது எனத்தெரியவில்லை. கிறித்துவ மத கட்டமைப்பில் மன்னிப்பு வழங்குதலும் தன்னை இகழ்ந்தவனை பொறுத்து அமைதி காத்தலும் பெரும்பான்மையானவைகளாக நீண்டகாலம் முன்னிருத்தப்பட்டு வருகின்றன. இவற்றை இப்படத்திலும் பயன்படுத்தியிருப்பது மூலம் படைப்பாளி ராதாமோகன், எந்தக் குழுவுக்குள் வருகிறார் எனத்தெரியவில்லை. எந்த மதத்துக்கும் இழிவு வராது (கடத்துவது முஸ்லீம், மன்னிப்பது கிறித்துவம், நடப்பது திருப்பதியில்) என்பதாக இதை ஒரு ’பொதுப்புத்தியாக’ வடிவமைத்தாலும் விமான நிலையத்திற்கருகில் தேவாலயம் இருப்பதும் அதன் மணியொலியை ரகசிய ஒலியாக்க முனைவதும் ராதாமோகன் என்ற படைப்பாளியையும் அவரது இப்படைப்பையும் ஒரு குழுவுக்குள்ளே அடக்க ஏதுவாக அமைகின்றன.

ஒரு மாற்றத்துக்காக, ஒரு சாமியாரை விமானத்துக்குள்ளே வைத்து, அவசர நேரத்தில் தியானம் செய்யச்சொன்னால் என்ன என்ற குறுக்குச்சிந்தனைக்கு, சாமியார், சல்லாபம் செய்யாமல், தியானம் செய்வதாய்க் காட்டினால் நம்பிக்கைக்குறைவாக இருந்தாலும் இருக்குமோ என சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ.

கார்ல்மார்க்சையும் காந்தியையும் படித்தவன் ’அல்பாயுசு’வில் போவான் என்பதும் காலங்காலமாக கொள்ளப்படும் புரட்சியாளனின் / புரட்சியின் முடிவுக்கு எடுத்துக்காட்டு என்பதாகவே அதையும் முன்மொழிந்திருக்கிறார் ராதாமோகன்.

விமானத்துக்குள்ளே அச்சச் சூழ்நிலை நிகழாதது பெருங்குறை, இறுதிக்காட்சிகளைத் தவிர.

ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கும் இதுபோன்ற ஒரு அவசர நிலையை ஒரு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பிரகாஷ்ராஜும் நாகார்ஜூனாவும் முடிப்பது போன்ற பிரமை, நிஜ உணர்வைக் குறைக்கிறது. பிரதமர் பேசுகிறார் என்று போனைக் கொடுக்கிறார்கள், அவ்வளவுதான்.

ஒருகாலத்தில் தான் அடித்த மனைவியிடம் இப்போது மன்னிப்புக் கேட்பது, கணவனிடம் கோபித்துக்கொண்டு சென்ற மனைவி திருந்தி திரும்பி வருவது போன்ற காட்சிகளை நினைத்தால் ’பெருமையாக’ இருக்கிறது.

விமானத்திற்குள் வேலைக்காரப்பெண்ணை, மிகுந்த எச்சரிக்கையோடும் அக்கறையோடும் முதன்முறை அனுப்பும் நாகார்ஜூனாவிற்கு, அந்தப்பெண் திரும்பி வந்து மறுமொழி எதுவும் கொடுத்ததாக காட்சி இல்லாமல் தொங்கி நிற்கிறது. அதேபோல போதை மருந்து வாலிபன். எதற்காக வந்தான், ஏன் வந்தான், ஏன் குதித்தான் என்ற கேள்விகள் போக, இவனும் கடத்தல்வாதிகளில் ஒருவனைப் போல இருப்பதும் குழப்பக்குறி.

நாகார்ஜுனா நச்சென்று பொருந்துகிறார். வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. பாடல் இல்லாததும், வெடிச்சிரிப்புக்கு குறைவிருந்தாலும் ஆங்காங்கு அடிநாதமாய் நகரும் நகையும் புன்னகையை வரவழைக்கின்றன.

பிணைக்கைதி இறந்துபோவதும் அதற்குப்பதில் ஏற்பாடு செய்வதும் காமெடிக்கும் கதையின் போக்குக்கும் வழிவிடுகின்றன.

எல்லா ”சுய” போதைகளையும் அபிலாஷைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, கிரேசிமோகன் போன்றவர்களுடன் கூட்டணி கொண்டால், ராதாமோகன் மிகச்சிறந்த ஒரு காமெடிப்படத்தைக் கொடுக்கமுடியும் என்று தோன்றுகிறது.

பாட்டுக்கள் இல்லாது, ஒரே களத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா என்பதே கமல்ஹாசன் உட்பட்ட சிலருக்கு மட்டுமே சிந்தனைக்குரியதாயும் செயலுக்குரியதாயும் சில காலங்களுக்கு முன்பிருந்த நிலையில், அத்தகைய முயற்சிகள் தமிழில் பிற தயாரிப்பாளர்களிடமிருந்தும் இயக்குனர்களிடமிருந்தும் வரத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியதுதான். இதையே நச்சென்று பொட்டில் அடித்தார்போல சொல்லவும் முடியும்.

கடல் பயணம், விமானப்பயணம், பேருந்துப்பயணம், ரயில்பயணம் என்பவைகளெல்லாம் போக, வாழ்க்கையே ஒரு பயணம் தானே. எல்லாப் பயணத்திலும் காலமாகவும் தூரமாகவும் உணர்வாகவும் ஏதோ ஒரு உச்சம் இருக்கிறது. அந்த உச்சத்தை இந்த ”பயணம்” எட்டாவிட்டாலும், இது எட்டிக்காய் இல்லை என்பது ஆறுதலே.


எம்.கே.குமார்

தங்கமீன் இதழில் வெளிவந்தது. (வெட்டப்பட்ட பகுதிகளும் இங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன)

No comments:

Search This Blog