Sunday, May 10, 2020

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெளிநாட்டுத்தொழிலாளர்களின் நோய்த்தொற்று - குறையுமா?

Image may contain: food

ஏப்ரல் 22 நேற்று பாதிக்கப்பட்டுள்ள 1016 பேருடன் கோவிட்19ஆல் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 10,141 ஆகிவிட்டது. நேற்றைய 1016 பேரில் 999 பேர் வெளிநாட்டுத்தொழிலாளர்கள். நேற்றுமட்டுமல்ல, சில நாட்களாக இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்ட பத்தாயிரம் பேரில் ஏறக்குறைய ஏழாயிரம் பேர் வெளிநாட்டுத்தொழிலாளர்கள். எப்போதும் எதையும் கட்டுக்கோப்பாக முன்தயாரிப்புடன் நடந்துகொள்ளும் சிங்கப்பூர், கோவிட் 19-ஐ கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டதா? குறிப்பாக வெளிநாட்டுத்தொழிலாளர்களின் வசிப்பிடத்தில்? என்ன நடக்கிறது என ஒரு பறவைப்பார்வை பார்ப்போம்.
வூஹானில் சிக்கலான நுரையீரல்தொற்று ஒன்று உருவாகியிருப்பதாக முறைப்படி உலக சுகாதார நிறுவனத்திடம் சொல்கிறது சீனா, டிசம்பர் 31 அன்று.
ஜனவரி 2 அன்று அதுகுறித்துத் தனக்குத்தெரிவதாகவும் ஜனவரி 3 முதல் வூஹானிலிருந்து வரும் அனைவரும் உடல்வெப்பச்சோதனைக்கு ஆளாகுவார்கள் என்கிறது சிங்கப்பூர். ஜனவரி 4 அன்று சீனாவிலிருந்து வந்த குழந்தைக்கு நுரையீரல்தொற்று இருப்பதாகச் சந்தேகித்து பிறகு அது சாதாரண இழுப்புப்பிரச்சனை என்று மருத்துவமனை சொல்கிறது.
இடையில் தென்கொரியா, பிலிப்பின்ஸ், ஜப்பான் என ஆங்காங்கு சீனாவிலிருந்து சென்று குவியும் மக்களால் உலகளாவிய பாதிப்பு எண்ணிக்கை ஆரம்பமாகிறது.
ஜனவரி 23 அன்று தன் முதல் கிருமித்தொற்று சம்பவம் சிங்கப்பூரில் பதிவாகிறது. சீனாவின் வூகானிலிருந்து வந்த 66 வயது சீனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கடல், நிலம் என அனைத்து குடியுரிமை சாவடிகளிலும் உடல்வெப்ப சோதனையை சிங்கப்பூர் அறிவிக்கிறது. அனைத்து வேலையிடங்களிலும் அலுவலகங்களிலும் உடல்வெப்ப சோதனையும் உடலநலசுய அறிவிப்புப்படிவத்தையும் பின்பற்ற அறிவுறுத்துகிறது.
முதல் தொற்று நபர் தங்கியிருந்த ஷாங்ரிலா செந்தோசா ஹோட்டல் உடனடி கிளீனிங் சோதனைக்கு உள்ளாகிறது. அவருடன் வந்த ஒன்பது பேர், மற்றும் ஹோட்டல்.பணியாளர்கள் உடபட அனைவருடைய தொடர்பைத்தேடி, அனைவரையும் சோதனைசெய்து படுசீரியசாக தன் பணிகளை முடுக்கிவிடுகிறது. அதே நாளில் வூகான் நகரை முழுவதும்.மூடுவதாக அறிவிக்கிறது சீனா.
ஜனவரி 28 வரை மொத்தம் 6 நோயாளிகள் எனவும் அனைவரும் சீனாவிலிருந்து வந்தவர்கள் எனவும் பதிவாகிறது. அதே நாளிலிருந்து சீனாவின் ஹுபே பகுதியிலிருந்து வரும் எவரும் நாட்டுக்குள் புக அனுமதிக்கப்படமாட்டார்கள் என அதிரடியாய் களத்தில் குதிக்கிறது. மொத்தம் 170பேர் தனிமைப்படுத்தப்பட்டு சந்தேகத்தொடர்பு சோதனை செய்யப்பட்டு 91 பேர் விடுவிக்கப்படுகிறார்கள்.
அதுவரை உள்ளூரில் மனிதருக்கிடையே பரவல் சம்பவம் ஏதும் பதிவாகவில்லை என்று கவனமாயிருந்த சிங்கப்பூருக்கு முதல் அதிர்ச்சியாய் வருகிறது சீனமூலிகைக்கடை.
ஜனவரி 22 அன்று சீனாவின் Guangxi மாகாணத்திலிருந்து வந்திறங்கியது 20 பேரைக்கொண்ட ஒரு சுற்றுலாக்குழு. (அவர்களில் இருவருக்கு அப்போதே தொற்று இருந்ததாகச்சொல்கிறது சீனா அலுவலகம்.) ஜனவரி 22-23 சிங்கப்பூர்லிருந்துவிட்டு, 24 அன்று மலேசியா சென்று மீண்டும் ஜனவரி 27 சிங்கப்பூருக்கு வந்து, அன்று காலை 3 மணி அளவில் சீனா திரும்புகிறது அக்குழு. (ஜனவரி 25-27 சீனப்புத்தாண்டு விடுமுறை) சிங்கப்பூரில் தங்கியிருந்த நாட்களில் ஆறு இடங்களுக்குச்செல்கிறது அச்சுற்றுலாக்குழு. அவற்றில் ஒன்று, சீனப்பயணிகளிடையே பெருமைபெற்ற, ஜலான் பெசாருக்கு அருகிலிருக்கும் Cavan சாலையில் உள்ள Yong Thai Hang எனும் சீனமூலிகைக்கடை. அங்கு செல்கிறார்கள் அவர்களில் சிலர். அந்தக் கடையில் விற்பனைப்பிரதிநிதியாகப் பணியாற்றும் சிங்கப்பூர் நிரந்தர குடிவாசிப்பெண் தொற்றுநோய்க்கு ஆளாகிறார். (நோயாளி 19). சிங்கப்பூரின் முதல் உள்ளூர் தொற்று சம்பவம் உறுதியாகிறது.
மனிதர் - மனிதர் இது பரவக்கூடும் எனவும் தெரியவந்தவுடன் அடுத்தடுத்து தொற்றுதொடர்புகளை மின்னல்வேகத்தில் களமிறங்கி வளைத்து தனிமைப்படுத்துகிறார்கள்.
சீனமூலிகைக்கடையில் வேலைபார்த்த பெண்ணின் கணவர், குழந்தை உட்பட அனைவரும் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். அவர்களுடைய பணிப்பெண்ணும் (நோயாளி 21) பாதிக்கப்படுகிறார். இவரே வேலையிடத்தில் பாதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத்தொழிலாளர் (பணிப்பெண்) ஆவார்..
பிப்ரவரி 9 அன்று சிங்கப்பூரின் முதல் வெளிநாட்டு ஒர்க்கர் பாதிக்கப்படுகிறார். அவர் சிலேத்தார் ஏரோஸ்பேஸ் கட்டுமானத்தில் பணியாற்றியவர். அந்நிறுவனத்தில் பணியாற்றிய உள்ளூர் ஆட்கள் யாருக்கும் அப்போது கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆக, அந்த ஒர்க்கர் வேறெங்கோ கிருமித்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார். அவருடைய பணியிடத்தைத்தவிர வெறெங்கெல்லாம் அவர் சென்றார் என்று கட்டாயம் அலசப்பட்டிருக்கும். ஆனால் அவர் உண்மைகளைச்சொன்னாரா என்று தெரியவில்லை. அப்போது அவர் சென்ற இடங்கள் குறித்த எந்த எச்சரிக்கையும் சொல்லப்படவில்லை.
பிப்ரவரி 14 அன்று சிங்கப்பூரின் தொற்றுமையங்களாக பாயாலேபரில் உள்ள The Life Church and Missions (146B Paya Lebar Road), சீன மருந்துக்கடை Yong Thai Hang (24 Cavan Road), சீனாவிலிருந்த வந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டோர் கலந்துகொண்ட Grand Hyatt ஹோட்டலில் நடந்த தனி வியாபார கூட்டம், வெளிநாட்டுத்தொழிலாளர்கள் (நான்கு பங்களாதேசிகள்) வேலைசெய்த Seletar Aerospace Heights construction site, சீனர் ஒருவர் சென்று பரப்பிய Grace Assembly of God சர்ச் ஆகியவை என அறிவிக்கப்படிருந்தது.
பிப்ரவரி 18 அன்று, Seletar Aerospace Heights construction கட்டுமானத்தின் ஒட்டுமொத்த கான்ராக்டரான Boustead நிறுவனம், தன்னிடம் subcontractorஆக வேலைசெய்த அந்த நான்கு பங்களாதேசிகள் (நோயாளி 42, 47, 52, 56 & 69) உட்பட ஐந்துபேருக்கும் கிருமித்தொற்று அங்கு ஏற்பட்டதாகவும் தொடர்பில் இருந்தவர்கள் தனைமைப்படுத்துள்ளார்கள் எனவும் அறிவிக்கிறது.
ஆக, வெளிநாட்டுத்தொழிலாளர்களிடையே கிடுகிடு வேகத்தில் பரவிய முதல் தொற்று, பிப்ரவரி 9-18 க்குள் தொடங்கியிருக்கவேண்டும்.
எப்படி பரவியது?
Purpose-built dormitories எனப்படும் வெ.நா.தொ (வெளிநாட்டுத்தொழிலாளர்) தங்குவதற்கென்றே மொத்தம் 13 விடுதிகள் இங்கு உள்ளன. BCAவின் மேற்பார்வையில் உள்ள இவற்றில் குறைந்தது 1,500 முதல் அதிகபட்சம் 25,000 பேர் தங்க முடியும். ஒவ்வொன்றிலும் சமைக்கும் வசதிகள், துணிதுவைக்கும் வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள், உடல்நலக்குறைவுக்கு ஒதுங்கும் பகுதி, சாப்பாட்டுக்கடைகள், சிறுமளிகைக்கடை, பொழுதுபோக்குக்கூடங்கள், முடிவெட்டும்கடை ஆகியவைகளை உள்ளடுக்கி இருக்கும்.
வெ.நா தொழிலாளர்களுக்கென்றே கட்டப்பட்ட ஏறக்குறைய அனைத்து தங்கும்விடுதிகளிலும் கொரோனா இப்போது தலைதூக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஒரே இடத்தில் வேலைசெய்துவிட்டு வேறுவேறு விடுதிகளுக்குத்திரும்பும்போது அங்குள்ளவர்களுக்கும் பரவிவிட்டது. உதாரணமாக, சிலேத்தார் வேலையிடத்தில் பாதிக்கப்பட்ட அந்த நால்வரோடு இன்னும்பலர் இருந்திருக்கலாம், அவர்கள் வெவ்வேறு விடுதிகளில் தங்கியிருந்திருப்பார்கள். இவ்வாறு ஒன்றிலிருந்து மற்றொன்று என பரவியிருக்கூடும்.
விடுதிகளில் ஒரே அறையில் 8-12பேர் வசிப்பதும், அதிலும் அவர்களுக்கு ஓரிரு கழிவறைகளே இருப்பதும், சமைக்க, சாப்பிட என்று அவர்கள் புழங்கும் அறைகளும் நெருக்கமாக, ஒரே தொடர்புகளுக்குள்ளேயே இருந்ததாலும் மேலும் வேகமாக இது பரவிவிட்டது. இதுபோக, வேலையிடத்துக்குச் செல்லும்போதும் வேலைமுடிந்து திரும்பும்போதும் லாரிகளில் அவர்கள் அழைத்துவரப்பட்டபோது நெருக்கடியாக இருந்ததால் பரவல் மேலும் சுலபமாயிருக்கூடும்.
இன்றைய நிலை எப்படி?
சுகாதார அமைச்சு, மனிதவள அமைச்சு, சுற்றுப்புற சுகாதார அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, உள்துறை அமைச்சு, தன்னார்வலர்கள் என அனைவரும் உக்கிரமாகக் கைகோர்த்து களத்தில் நின்று பணியாற்றுகின்றனர்.
1. பாதிக்கப்பட்ட விடுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக சட்டமாக்கப்பட்டுள்ளன
2. பாதிக்கப்பட்ட விடுதியிலிருந்து யாரும் வெளியேறவோ உள்ளேயே வலம்வரவோ முடியாது. இதன்மூலம் பெரும்பான்மையான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
3. ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்கள் அங்கிருந்து பிரிக்கப்பட்டு மருத்துவ வசதிக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
4. தொற்று ஏற்பட்டவர்களுடன் ஒரே அறையில் இருந்தவர்களில் பலர், தனிமைப்படுத்தப்பட்டு தனித்தனி அறைகளில் (ஹோட்டல்கள், இராணுவ பயிற்சி தங்குமுகாம்கள், கப்பல்கள், இதற்கெனவே ஏற்படுத்தப்பட்ட தனியறைக்கூடங்கள்) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
5. இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு, மருத்துவச்சேவைகள், கண்காணிப்புகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. இவை முழுக்க முழுக்க அரசாங்கத்தின் ஏற்பாடுகள்.
6. விடுதிக்குள்ளேயே மருத்துவ வசதிகள் அரசாங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. ஏதேனும் தொற்று அறிகுறிகள் தெரியும் பட்சத்தில் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
7. சைவம் அசைவம், முஸ்லீம் என எல்லா தொழிலாளர்களுக்கும் சாப்பாடு குறித்த நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.
8. இதுபோக எல்லா விடுதிகளிலும் வைஃபை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இலவச சிம் கார்டுகளும் வழங்கப்படுகின்றன
9. இலவசமாக தெர்மாமீட்டர்களும் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
10. அனைத்துத்தொழிலாளர்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
11. இவர்கள் அனைவருக்கும் அடிப்படை மாதச்சம்பளத்தைக் கட்டாயம் வழங்கவேண்டும் என்று முதலாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
12 அவர்கள் பணிபுரியும் நிறுவனம், மாதாமாதம் மனிதவள அமைச்சுக்குக் கட்டவேண்டிய லெவி எனப்படும் தொழிலாளர் வரித்தொகையை, ஏப்ரல், மே என இரண்டுமாதங்களுக்கு தள்ளுபடி செய்துள்ளது அரசாங்கம். இதனால் வெளிநாட்டுத்தொழிலாளர்களை வைத்திருந்ததால் ஏற்பட்ட சுமையை நீக்கியிருக்கிறது அரசாங்கம்.
13 மேலும் ஒவ்வொரு வெளிநாட்டுத்தொழிலாளருக்கும் சராசரியாக $750 வெள்ளியை ஒருதவணைத்தொகையாக நேரிடையாக முதலாளிகளுக்கு வழங்குகிறது. இதன்மூலம் சம்பளம் வழங்கவேண்டிய அவர்களுடைய சுமை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
14. ஒவ்வொரு நாளும் முதலாளிகள் தங்கள் வேலையாட்களைக் கண்காணித்து சாப்பாடு, உடல்நலம் என அவர்கள் பேணப்பட்டு வருகிறார்கள் என்னும் தகவலை நேரிடையாக மனிதவள அமைச்சிடம் தினமும் தெரிவிக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது.
பயப்படவேண்டுமா?
இத்தகைய நெருக்கடி நேரத்தில் அரசாங்கம் மிக துரிதமாகச்செயல்பட்டு வெளிநாட்டுத்தொழிலாளர்களிடையே மேலும் பரவாமல் இருக்க பெரும் நடவடிக்களை எடுத்துவருகிறது. பிரதமர் தன் உரையில் சொன்னதைப்போல வெளிநாட்டுத்தொழிலாளர்களையும் சொந்த குடிமக்களாய் பாவித்து உடல்நலத்தைப் பேணிவருகிறது. இதுவரை வந்த தொற்று அதிகரிப்பு எண்ணிக்கை யாவும் ஏற்கனவே பாதிக்கப்பட்டோ அறிகுறி தெரிந்தோ மருத்துவக்கண்காணிப்பில் இருந்தவர்கள்.
தக்க நேரத்தில் வெளிநாட்டுத்தொழிலாளர் விடுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல், தொடர்கண்காணிப்பு, நகருவதைக் கட்டுப்படுத்துதல், அனைத்து கட்டுமான தொழிலாளர்களையும் இருப்பிடத்துக்குள்ளே இருக்கச்சொன்னமை, இருப்பிடத்துக்கே வரும் உணவு, மருத்துவவசதிகள் என மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கிடையேயான பரவலைக் கட்டுப்படுத்தி தொற்று எண்ணிக்கையை விரைவில் குறைந்திடும் என்று கட்டாயம் நம்பலாம்.
தேவையற்ற பயத்தை விலக்கி, சுத்தமாகவும் சுய பாதுகாப்பு முகக்கவசங்களை பின்பற்றியும், சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியும் சிங்கப்பூருடன் ஒன்றிணைந்து கண்ணுக்குத்தெரியாத எதிரியை வெல்லப்போராடுவோம்.
எம்.கே.குமார் MK.Kumar
#StayhomeforSG
#SGUnited
#SingaporeTogether
படம்: இன்று வழங்கப்பட்ட உணவு; நன்றி: சி.பி.

No comments:

Search This Blog